லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் 23 வயது சட்டக் கல்லூரி மாணவியை, மிரட்டி ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியவர் சாமியார் சின்மயானந்தா. இவர், பாஜக-வின் மூத்த தலைவர் என்பதுடன், அக்கட்சியின் சார்பில் 3 முறை எம்.பி.யாகவும், வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இதனால் உத்தரப்பிரதேச பாஜகஅரசு சின்மயானந்தாவை கைது செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வந்தது.ஒருகட்டத்தில், சின்மயானந்தாவை கைது செய்யாவிட்டால், தீக்குளிப்பேன் என்று பாதிக்கப்பட்ட மாணவி எச்சரிக்கை விடுத்த பிறகே, அவரைக் கைது செய்தது. எனினும், நெஞ்சுவலி என்ற காரணத்தைச் சொல்லி மருத்துவமனையில் சேர்த் துள்ளது. அதுமட்டுமல்ல, சின்மயானந்தாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்று, IPC 376C, 354 D, 342, 506 உள்ளிட்ட சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், சின்மயானந்தாவிடம் பணம் கேட்டு மிரட்டினார் என்று கூறி, பாதிக்கப்பட்ட மாணவியையும் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இவ்வளவையும் செய்துவிட்டு, திடீரென ‘சின்மயானந்தா இனிமேல் பாஜகவின் உறுப்பினர் இல்லை’ என்றுஒரு நாடகத்தை பாஜக அரங்கேற்றியுள்ளது. சின்மயானந்தா பற்றி பாஜக-விடம் கருத்து ஏதும் கேட்கக் கூடாது என்று கூறியுள்ள உத்தரப்பிரதேச பாஜக செய்திதொடர்பாளர் ஹரிஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா, ‘சின்மயானந்தா எந்த நாளிலிருந்து உறுப்பினர் இல்லை என்பதை சொல்ல முடியாது’ என்றும் தப்பி ஓடியுள்ளார். புகார் கொடுத்த மாணவி மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டது பற்றியும், சின்மயானந்தா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தபாரபட்சம் பற்றியும் அவர் பதிலளிக்கவில்லை.